சுத்த சன்மார்க்க வேண்டுகோள் - எழுத்து பிரித்த வடிவில்

 


திருசிற்றம்பலம்

 

அப்பா நான் வேண்டுதல் கேட்டு 

அருள் புரிதல் வேண்டும்  

ஆருயிர் கட்கு எல்லாம் 

நான் அன்பு செயல் வேண்டும் 

எப்பாரும் எப்பதமும் எங்கணும் 

நான் சென்றே

எந்தை நினது அருட் புகழை 

இயம்பு இடல் வேண்டும் 

செப்பாத மேனிலை மேல் 

சுத்த சிவ மார்க்கம் 

திகழ்ந்து ஓங்க அருட்சோதி 

செலுத்தி இடல் வேண்டும் 

தப்பு ஏது நான் செயினும் 

நீ பொறுத்தல் வேண்டும்

தலைவ நினைப் பிரியாத

நிலைமையும் வேண்டுவனே.

 


ஐயா நான் வேண்டுதல் கேட்டு 

அருள் புரிதல் வேண்டும் 

அடி முடி கண்ட நாளும் 

அனுபவித்தல் வேண்டும் 

பொய்யாத வாய்மைகளே

புகன்று இடுதல் வேண்டும் 

புகன்றபடி புகன்றபடி 

புரிந்திடுதல் வேண்டும் 

எய்யாத அருட்சோதி 

என் கையுறல் வேண்டும் 

இறந்த உயிர் தமை மீட்டும் 

எழுப்பியிடல் வேண்டும் 

நையாத வண்ணம் உயிர் 

காத்திடுதல் வேண்டும்

நாயக நின்தனைப் பிரியாத 

உறுதலும் வேண்டுவனே.


 

அண்ணா நான் வேண்டுதல் கேட்டு 

அருள் புரிதல் வேண்டும் 

அழியாத தனி வடிவம் 

யான் அடைதல் வேண்டும் 

கண்ணார நினை எங்கும் 

கண்வத்தல் வேண்டும் 

காணாத காட்சி எலாம் 

கண்டு கொளல் வேண்டும் 

பண்ணார நின்றனையே 

பாடி உறல் வேண்டும் 

பரம ஆனந்தப் பெருங் கூத்த  

ஆடியிடல் வேண்டும் 

உண்ணாடி உயிர்கள் உறும் 

துயர் தவிர்த்தல் வேண்டும்

உனைப் பிரியாது உறுகின்ற 

உறவது வேண்டுவனே.

 


அத்தா நான் வேண்டுதல் கேட்டு 

அருள் புரிதல் வேண்டும் 

அருட்பெருஞ்சோதியைப் பெற்றே 

அகம் களித்தல் வேண்டும் 

செத்தாரை மீட்டும் இங்கே 

எழுப்பியிடல் வேண்டும் 

திருச் சபைக்கே அடிமைகளாச் 

செய்வித்தல் வேண்டும் 

ஒத்தாரும் உயர்ந்தாரும் 

தாழ்ந்தாரும் எவரும் 

ஒருமை உளர் ஆகி 

உலகியல் நடத்தல் வேண்டும்

எத்தாலும் அழியாத வடிவதிலே 

நானும் எந்தாயும் ஒன்றாக 

இனிதுறல் வேண்டுவனே.

 


அரைசே நான் வேண்டுதல் கேட்டு 

அருள் புரிதல் வேண்டும் 

அருட்  பெருஞ் சோதியைப் பெற்றே 

அகம் மகிழ்தல் வேண்டும் 

வரை சேர் எவ்வுலகமும் 

ஓர் ஒழுக்கமுறல் வேண்டும் 

மடிந்தாரை மீளவும் நான் 

வருவித்தல் வேண்டும் 

புரை சேரும் கொலை நெறியும் 

புலை நெறியும் சிறிதும் 

பொருந்தாமல் எவ்வுயிரும் 

புரிந்துவத்தல் வேண்டும்

உரைசேர் மெய்த் திருவடிவில் 

எந்தாயும் நானும் 

ஒன்றாகி எஞ்ஞான்றும் 

ஓங்குதல் வேண்டுவனே.

 


அடிகேள் நான் வேண்டுதல் கேட்டு 

அருள் புரிதல் வேண்டும் 

அண்டமெலாம் பிண்டமெலாம்

கண்டு கொளல் வேண்டும் 

துடிசேர் எவ்வுலகமும் 

எத் தேவரும் எவ்வுயிரும் 

சுத்த சிவ சன்மார்க்கம் 

பெற்றிடுதல் வேண்டும் 

படிவானும் படைத்தல் முதல் ஐந்தொழிலும் 

ஞானம் படைத்தல் முதல் ஐந்தொழிலும் 

நான் புரிதல் வேண்டும்

ஒடியாத திருவடிவில் 

எந்தாயும் நானும் 

ஒன்று ஆகி எஞ்ஞான்றும் 

ஓங்குதல் வேண்டுவனே.

 


அம்மா நான் வேண்டுதல் கேட்டு 

அருள் புரிதல் வேண்டும் 

ஆணவம் ஆதிய முழுதும் 

அறுத்து நிற்றல் வேண்டும் 

இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம் 

என் வசத்தே இயங்கி 

ஒரு தீமையும் 

இல்லாத இருத்தல் வேண்டும் 

எம்மான் நான் வேண்டுதல் 

வேண்டாமை  அறல் வேண்டும் 

ஏகசிவ போக அனு போகம் 

உறல் வேண்டும்

தம்மானத் திருவடிவில் 

எந்தாயும் நானும் 

சார்ந்து கலந்து ஓங்குகின்ற 

தன்மையும் வேண்டுவனே.

 


அச்சா நான் வேண்டுதல் கேட்டு 

அருள் புரிதல் வேண்டும் 

ஆறு அந்தம் நிலைகள் எல்லாம் 

அறிந்த அடைதல் வேண்டும் 

எச்சார்பும் ஆகி 

உயிர்க்கு இதம் புரிதல் வேண்டும் 

எனை அடுத்தார் தமக்கு எல்லாம் 

இன்புதரல் வேண்டும் 

இச்சாதி சமய விகற்பங்கள் எல்லாம் 

தவிர்த்தே எவ்வுலகும் சன்மார்க்கப் 

பொது அடைதல் வேண்டும்

உச்சி ஆதி அந்தம் இலாத 

திரு வடிவில்

யானும் உடையாயும் 

கலந்து ஓங்கும்

ஒருமையும் வேண்டுவனே


 

அறிவா நான் வேண்டுதல் கேட்டு 

அருள் புரிதல் வேண்டும் 

ஐந்தொழில் நான் புரிந்து உலகில்

அருள் விளக்கல் வேண்டும் 

செறியாத கரணம் எல்லாம் 

செறித்து அடக்கல் வேண்டும் 

சித்தாந்த வேதாந்தப் 

பொது சிறத்தல் வேண்டும் 

எறியாத என் எண்ணம் எல்லாம் 

இனிது அருளல் வேண்டும் 

எல்லாஞ் செய் வல்ல சித்தே

எனக்ககு அளித்தல் வேண்டும்

பிறியாது என்னொடு கலந்து 

நீ இருத்தல் வேண்டும் 

பெருமான் நின் தனைப் பாடி

ஆடுதல் வேண்டுவனே.

 


அருளா நான் வேண்டுதல் கேட்டு 

அருள் புரிதல் வேண்டும் 

அணுத் துணையும் சினம் காமம்

அடையாமை வேண்டும் 

மருளாய உலகம் எல்லாம் மருள் நீங்கி 

ஞான மன்றம் இடத்தே வள்ளல் 

உனை வாழ்த்தியிடல் வேண்டும் 

இருளாமை உறல் வேண்டும் 

எனை அடுத்தார் 

சுகம் வாய்ந்திடல் வேண்டும் 

எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும் 

பொருளாம் ஓர் திருவடிவில் 

உடையாயும் நானும் புணர்ந்து கலந்து 

ஒன்று ஆகி

பொருந்துதல் வேண்டுவனே.

 


அமலா நான் வேண்டுதல் கேட்டு 

அருள் புரிதல் வேண்டும் 

ஆடி நிற்குஞ் சேவடியைப் 

பாடி நிற்க வேண்டும் 

எமன் ஆதித் தடை என்றும் 

எய்தாமை வேண்டும் 

எல்லாம் செய் வல்ல திறன் 

எனக்கு அளித்தல் வேண்டும் 

கமை ஆதி  அடைந்து 

உயிர்கள் எல்லாம் 

சன் மார்க்கம் காதலித்தே 

திருப் பொதுவைக் 

களித்து ஏத்தல் வேண்டும்

விமலா ஆதி உடைய 

ஒரு திரு வடிவில் 

யானும் விமலா நீயுங் கலந்தே 

விளங்குதல் வேண்டுவனே.

 

திருசிற்றம்பலம்


Reference: https://www.thiruarutpa.org/thirumurai/v/T291/tm/suththa_sanmaarkka_veentukool


Key take away: All songs ends with prayers to request to be qualified to be united and/or be united with GOD.


Comments

Popular posts from this blog

திருக்கதவந் திறத்தல் - எழுத்து பிரித்த வடிவில்

உபதேச உண்மை - எழுத்து பிரித்த வடிவில்